|
பரமாத்மா |
வேதம் எப்படி வந்தது?. எப்பொழுது உண்டாகியது?.
யார் அதைப் புனைந்தார்கள் என்றெல்லாம் சிந்திக்கத்தெரிந்த நமக்குள் கேள்விகள் எழுகின்றன. இதற்கு நமது நாட்டுப் பண்டைய மரபுகளும், தற்கால, முக்கியமாக மேல் நாட்டு, ஆராய்ச்சிகளும், முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கூறுகின்றன. முதலில் நம்நாட்டு மரபுகளைக் கவனிப்போம்.
நமது மரபின்படி வேதம் அநாதியானது. அது அபௌருஷேயம் என்று கூறுகிறார்கள். அபௌருஷேயம் என்றால் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்கப்பட்டதல்ல என்று பொருள். வேதத்தைப் பல ஸூக்தங்களாகப் பிரித்திருக்கிறார்கள். உதாரணமாக ரிக் வேதத்தில் 1028 ஸூக்தங்கள் உள்ளன. ஒவ்வொரு ஸூக்கத்திற்கும் ஒரு ரிஷி உண்டு. ஆனால் அந்த ரிஷி அந்த ஸூக்தத்தை எழுதியதாகவோ, புனைந்ததாகவோ நம் மரபில் கூறவில்லை.
ரிஷிகளும் மனிதர்கள் தான், மனிதர்களில் உயர்ந்தவர்கள். ரிஷிகள் ஸூக்தங்களைப் புனைந்தார்கள் என்றால் வேதம் அபௌருஷேயமாகாது.
தனி மனிதன் புனையவில்லை என்றால், பகவான் வேதத்தைப் புனைந்தாரா? அப்படிப் பகவான் வேதத்தைப் புனைந்தார் என்றால், அவர் ஒரு கால கட்டத்தில் அதைச் செய்திருக்க வேண்டும். அப்படியானால் அதற்குமுன், வேதம் இல்லாத, காலம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் வேதம் அநாதி என்று நம் மரபு சொல்லுகிறது. அநாதி என்ற வடமொழிச் சொல்லிற்கு என்ன பொருள் என்றால் அதற்கு முந்தியதாக, அதற்கு ஆதியாக எதுவும் இல்லை என்பதுதான். பகவான் வேதத்தைப் புனைந்து அதற்குமுன் ஒருகாலம் இருந்தால், வேதம் அநாதி ஆகாது. ஆகையால் பகவானும் வேதத்தைப் புனையவில்லை; பின் எப்படி வேதம் தோன்றியது?
வேதம் அநாதி என்றால் அது மனிதன் தோன்றுவதற்கு முன்னால், உலக சிருஷ்டிக்கு முன்னால், காலம் ஏற்படுவதற்கு முன்னால் இருந்திருக்க வேண்டும். அதாவது பகவானும் வேதமும் எப்பொழுதும் இருந்திருக்க வேண்டும். எல்லாமே பகவானிடமிருந்து வந்தது என்ற தத்துவப்படி பார்த்தால், பகவானிடமிருந்து வேறாகத் தனியாக வேறு ஒன்றும் இருந்திருக்க முடியாது. வேதத்தை பகவானும் உண்டு பண்ணவில்லை. ஆனாலும் அது அநாதி என்றால் அது எப்படி ஸாத்தியம்?
பகவானுக்கும் புறம்பாக ஒன்றுமில்லை என்ற கொள்கைக்கு முரண்பாடாயிருக்கிறதே!
.ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா?
இதற்கு விடை வேதத்திலேயே உள்ளது. சுக்கில யஜுர் வேதத்தின் கடைசிப் பகுதியான பிருஹதாரண்யக உபநிஷத் இந்தக் குழப்பத்தைப் போக்குகிறது. மனைவி மைத்ரேயி தன் கணவனான யாக்ஞ்யவல்கியரை அமிருதத்வம் (சாகாமை) அடைய வழி என்ன என்று கேட்டபொழுது, அவர் கூறினார்:
‘ஈர விறகால் மூட்டப்பட்ட தீயிலிருந்து பிரிந்து புகை எவ்வண்ணம் கிளம்பிச் செல்லுகிறதோ, அவ்வண்ணமே ரிக்-யஜுர்-ஸாம-அதர்வண வேதங்கள் பரமாத்மாவிடமிருந்து மூச்சுக்காற்று போலத் தோன்றியவையாகும்.’ (பி.உ. 11 4.10)
அநாதியாக பகவான் என்றென்றும் இருந்திருக்கிறார் என்றால், வேதமும் அவருடனேயே, அவரது மூச்சுக்காற்றாக, அநாதியாக இருந்திருக்கிறது என்றாகி விடுகிறது! இதில் கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நம் மரபின்படி பகவானும் வேதத்தை இயற்றவில்லை, உண்டு பண்ணவில்லை என்பது தான். எப்பொழுதுமே பகவானும் வேதமும் சேர்ந்தே இருந்திருக்கின்றன.
நான்கு வேதங்களுக்கும் விரிவான உரை எழுதிய ஸாயணாச்சாரியார் வேதத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது ‘யஸ்ய நி: ச்வஸிதம் வேதா:’ என்கிறார். ‘எவனுக்கு வேதம் தான் மூச்சுக் காற்றோ’ என்று இதற்குப் பொருள். உபநிஷத்தில் கையாண்ட அதே நி: ச்வஸிதம் என்ற சொல்லை ஸாயனரும் சொல்லியிருக்கிறார். இங்கேயும் பகவான் வேதத்தைப் புனைந்தார் என்று கூறவில்லை.
பகவத் கீதையில் பகவான் கூறுகிறார். ‘வேதை: ச ஸர்வை: அஹமேவ வேத்ய:’, அதாவது, ‘நானே எல்லா வேதங்களாலும் அறியப்படுகிறவன்! வேதகிருத் (வேதத்தைப் புனைந்தவன்)
என்று சொல்லவில்லை: ஆனால் வேதாந்த கிருத் (வேதங்களின் முடிவான தத்துவத்தை உண்டு பண்ணினவன்) என்று பேசியிருக்கிறார். வேதாந்தம் என்ற தத்துவ ரூபத்தில் மக்களுக்கு வழிகாட்டியாக வருவதற்கு முன்னாலேயே, உலக சிருஷ்டி ஏற்படுவதற்கு முன்பே, சப்த ரூபத்தில் இந்த வேதங்கள் பகவானோடு பகவானாக, அவரது மூச்சுக் காற்றாக இருந்திருக்கின்றன.
ஒவ்வொரு ஸூக்தத்திற்கும் ஒரு ரிஷி (அல்லது சில ரிஷிகள்) உண்டு என்று பார்த்தோம். ஆனால் அந்த ரிஷிகள் அந்தந்த ஸூக்தங்களைப் புனைய வில்லை என்றும் பார்த்தோம். பின் ரிஷிக்கும் ஸூக்தத்திற்கும் என்ன தொடர்பு? சப்த அவைகளாக, பகவானின் மூச்சுக்காற்றாக இருந்த வேத மந்திரங்களைக் கண்டுபிடித்து, நமக்குப் புரியும் படியாக அவற்றுக்குச் சொல் வடிவம் கொடுத்து அவர்கள் உலகில் அவற்றைப் பரப்பினார்கள் என்பதேயாகும்.
ரிஷிகளுக்கு உலகில் ஏற்படுகிற எல்லா சலனங்களும் - அதாவது பரமாத்மாவன் சுவாஸகதிகளும்-தெரிந்தன. தெரிந்தது மட்டுமில்லை. ரேடியோ போன்ற சாதனைகள் மின் அலையை சப்த அலையாக மாற்றுவது போல, அந்த சலனங்களுக்குரிய சப்தங்கள் மனிதர்களுடைய காதுகளுக்கு எட்டும்படியான சப்தங்களாகவும் இவர்களுக்குத் தெரிந்தன. அப்படிப்பட்ட சப்தங்களையே வேத மந்திரங்கள் என அவர்கள் சீடர்களுக்குப் போதித்தது, அவர்கள் மூலமாக உலகிற்குத் தந்திருக்கிறார்கள்.
வேத மந்திரங்களுக்கு சுருதி என்று வடமொழியில் பெயர் உள்ளது.
எது கேட்கப்படுகிறதோ அது சுருதியாகும்.
நம் மரபின்படி குரு வாயால் வேதத்தை ஓதி, சீடர்கள் அதைக் காதால் கேட்டு, பாடம் பண்ணி, உலகிற்குப் பரப்பினார்கள் இதற்குக் ‘கர்ண பரம்பரை’ காதால் கேட்டுத் தலைமுறை தலைமுறையாக வந்தவை எனக் கூறுவார்கள். மகரிஷிகள் பிரபஞ்சத்தில் சப்த அலைகளாக இருந்த வேத மந்திரங்களைத், தங்களுடைய தெய்வீக சக்தி படைத்த காதுகளால் கேட்டு மக்களிடையே பரப்பினார்கள் என்பதாலும் வேதத்திற்கு சுருதி என்று பெயர் வந்தது. சுருதி என்பதைத்தான் தமிழில் எழுதாக் கிளவி என்கிறார்கள்.
[கிளத்தல்= கூறுதல் கிளவி=கூறக்காதால் கேட்டல்
வேத மந்திரங்களைக் கண்டுபிடித்த மகரிஷிகளுக்கு மந்திரதிரஷ்டார: என்று பெயர் உண்டு. இந்த வடமொழிச் சொல்லிற்கு மந்திரங்களைப் பார்ப்பவர்கள் என்று பொருள் ஆகும். மகரிஷிகள் வானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வேதமந்திரங்களைத் தங்களுடைய தெய்வீகக் கண்களால் பார்த்தார்களா? அப்படியானால் அந்த வேத மந்திரங்கள் எந்த லிபியில் எழுதப்பட்டிருந்தன? தேவநாகரியிலா அல்லது பிராம்மியிலா? வேத சப்தங்களையும், ஸ்வரங் களையும் எந்த லிபியிலும் எழுத முடியாதே!
.
ரிஷிகள் வேத மந்திரங்களைப் பார்த்தார்களா, கேட்டார்களா?
இதற்கெல்லாம் விளக்கங்கள் என்னவென்றால், உண்மையிலேயே, மகரிஷிகள் நியம நிஷ்டையுடன் கடும் தவம் செய்து, தியானத்தின் உச்ச நிலையை அடைந்த பொழுது, அவர்களுடைய உள்ளுணர்வால் இந்த மந்திரங்கள், இருட்டில் கருவானில் திடீர் என மின்னல் பளிச்சிடுமாப் போலத் தோன்றின; வடமொழியில் ஸ்புரித்தன என்றும் ஆங்கிலத்தில் flash ஆகின என்றும் கூறலாம். அந்த ஆழ்ந்த நியான நிலையில் ரிஷிகளுடைய கண்கள் எதையும் பார்க்கவில்லை. காதுகள் எதையும் கேட்கவில்லை; ஆனாலும் அந்த மந்திரங்கள் அவர்களுடைய உள்ளுணர்வில் பளிச்சிட்டன.
இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. மகரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டுபிடித்தார்கள் என்றால், இல்லாத ஒன்றை, அவர்கள் புதியதாகக் கண்டுபிடித்தார்கள் என்று பொருளில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் தான் நியூட்டன் பூமியில் ஈர்ப்பு சக்தி (gravitation) கண்டுபிடித்தான். ஆனால் அதற்கு முன்னால் இந்த ஈர்ப்பு சக்தி இல்லாமலிருந்த தில்லை. ஏற்கனவே இருந்ததை, மக்களுக்குத் தெரியாமலிருந்ததை அவன் கண்டுபிடித்து மக்களுக்கு விளக்கினான். அதே மாதிரி ஏற்கனவே இருந்த அமெரிக்காவை கொலம்பஸ் முதல் முறையாகக் கண்டு, ஐரோப்பிய மக்களுக்குத் தான் கண்டதைக் கூறினான். இதே மாதிரிதான், மகரிஷிகளும் ஏற்கனவே சப்த அவைகளாக இருந்த வேத மந்திரங்களைக் கண்டு பிடித்தார்கள்; அதாவது சாதாரண மக்கள் கேட்கக்கூடிய ஒலி வடிவத்தைக் கொடுத்தார்கள்
[தொடர்ந்து வரும்]